Aananthamae Paramananthame Yesu – ஆனந்தமே! பரமானந்தமே! – இயேசு

இராகம்: சங்கராபரணம் தாளம்: ஆதி
சரணங்கள்
1. ஆனந்தமே! பரமானந்தமே! – இயேசு
அண்ணலை அண்டினேன் ஆனந்தமே!
ஞான இரட்சகரென் பாவம் மன்னித்ததால்
ஆனேனவருக்குள்ளானந்தமே! – ஆனந்தமே
2. வீணாகக் காலமும் நான் கழித்தேன் – வழி
தோன்றாமல் நின்றுமே நான் விழித்தேன்!
காணாத ஆடெனைக் கண்டு சுமந்த – என்
காதலன் தோள் எனக்கானந்தமே! – ஆனந்தமே
3. நாடியே பாவத்தைத் தேடியே புரிந்து,
நைந்து கரைந்து மனம் மெலிந்து,
வாடியே தவித்த ஏழை என் பாவத்தை
நாடியே மன்னித்தார் நம்பினேனே! – ஆனந்தமே
4. பாவ வலையிலகப்பட்டுழன்ற – என்
பக்கமே வந்து கரந்தூக்கி,
ஜீவ பாதையில் வழி நடத்தி – நிதம்
தேற்றி வருகிறார் ஆனந்தமே – ஆனந்தமே
5. இந்த நன்றியை நான் மறவேன் – எந்தன்
யாவையும் பூசையாய் நான் படைத்தேன்
அந்தம்வரை இயேசு சுவாமிக்குத் தொண்டனாய்
ஆகவே தீர்மானம் ஆனந்தமே! – ஆனந்தமே

Leave a Comment